Friday, July 11, 2014

சிதறிய பூக்கள் - சிறுகதை - பாகம் 1

செய்தால் அவளைத்தான் திருமணம் செய்துக்கொள்வேன் இல்லையென்றால் திருமணமே வேண்டாம் என்று கேதார் தன் பெற்றோர்களிடம் கறாராக சொல்லி விட்டான். காவ்யா வேறு சாதிப் பெண். ஆனால் பார்க்க செக்க செவேல் என்று இருந்தாள். சுமுகமாகவும் இருந்தாள். நன்றாகப்  படித்திருந்தாள். நல்ல வேலையிலும் இருந்தாள். ஏதோ மகன் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று நினைத்து தலையை ஆட்டினாள் சாவித்ரி அம்மாள்.

இதை கேட்ட காவ்யா  கண்கள் நிறம்பி வழிந்தன. "எங்க அப்பா மறுத்திட்டார்," என்று வருத்தப்பட்டாள்.

"ஓடி வந்திடு," வாய் கூசாமல் கேதார் சொன்னான். "நான் உன்னை காப்பாத்தறேன்."

எவ்வளவு மன்றாடியும் அப்பா ஒப்புக்கொள்ளவில்லை  என்ற நிலையில், வேறு வழி இன்றி வீட்டை விட்டு காவ்யா புறப்பட்டு விட்டாள். அழகான பூவை ஒரு ரசிகன் பறித்து ஆசையுடன் முகரும் பொழுது அந்த பூ தான் பூத்த மரத்தை எண்ணி பார்க்குமா? அல்ல, தன்னை ஆசையுடன் அங்கீகரிப்பவனை நினைத்து பூரித்து போகுமா?

காவ்யா பிறந்த வீட்டை அடியோடு மறந்து விட்டாள். அழகான புருஷன், தன்  அழகில் மயங்கிய புருஷன் என்று அறிந்து, ஒரு கொடி மரத்தைச்சுற்றி வளருவதுபோல அவனை தன் ஊன்றுகோலாக எண்ணி அவனை சுற்றியே படர்ந்தாள். இரு அழகிய மகள்கள் அவர்களுக்கு - இரு கண்மணிகளாக கருதினாள். அவள் உலகம் நிறைந்திருந்தது. திருமணம்தான் வேர், கேதார்தான் மரம், அவள் கொடி, மகள்கள் மொட்டுக்கள். அவள் மனதில் வீசியது தென்றல்.

அந்த சந்தோஷத்தில் பூரித்து போன அவள், ஒரு மரம் போலவே காட்சி அளிக்க ஆரம்பித்தாள். முதலில் செல்லமாக சீண்டிய அவன், நாளடைவில்  கேலி செய்ய ஆரம்பித்தான். "ஏய் குண்டு," என்று தான் அவளை கூப்பிட்டான். அது போரடித்தால் பீப்பாய் என்று நக்கலடித்தான்.

அவளும் என்னென்னமோ எல்லாம் செய்து பார்த்தாள் ஆனால் வீட்டுப்பொருப்பு, குழந்தைகளை வளர்ப்பது - இதுவே சரியாக இருந்தது.

அவன் விலகுவது கூட தெரியவில்லையே. அவன் அவள் தோழி ராணியை புகழ்ந்து பேசும்பொழுது கூட கவனிக்கவில்லை. "அவளுக்கு குடும்பமா பொறுப்பா?" என்று சுட்டிக்காட்டினாள்.

ராணி அழகு என்று சொல்ல முடியாது ஆனால் சிம்பு போல உடல், மேற்கத்திய உடைகளில் கச்சிதமாக இருப்பாள். அடிக்கடி வந்து போவதால் வீட்டில் அனைவருக்கும் பழக்கம். "நீங்க ஏன்பா அவங்களுக்கு முத்தம் கொடுத்தீங்க?" என்று பெரிய மகள் அதிதி கேட்டாள். கேதார் முகத்தில் ஈ ஆடவில்லை. ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டு தன் மகளை உள்ளே அனுப்பினான்.

காவ்யா அவனை கண்கொட்டாமல் பார்த்தாள். ஏதோ தவறு நடந்து விட்டது, மன்னித்து விடு என்று கேட்டுக்கொள்வான் என்று எண்ணியவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. விவாகரத்து வேண்டும் என்று சொல்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

"நாம மறுபடியும் ஆரம்ப..."

அவளை எதுவும் சொல்ல விடாமல் தடுத்தான். அவன் ஆசைகளுக்கு என்றும் இடம் கொடுத்து பழகியவள் இன்று மற்றும் என்ன புதுசாக எதிர்க்கப்போகிறாள்! அலுத்து விட்டதாம் அவளுடன் வாழ்க்கை. கூட நடந்தால் அக்காவா என்று எல்லோரும் விசாரிக்கராங்களாம். எப்படி இந்த வார்த்தைகளை தாங்கிக்கொண்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை. எல்லாம் தன் குழந்தைகளுக்காகத்தான்.

ஆனால் இடி விவாகரத்தில் இல்லை, அதற்குப் பிறகுதான் என்று, ஒவ்வொரு நாளும் அவன் தயவுக்கு காத்திருந்த அவள் அறிய ஆரம்பித்தாள். குழந்தைகள் அவளிடம் வளர்ந்தன, ஆனால் அவர்களுடைய எல்லா செலவுகளையும் அவன் ஏற்க வேண்டய சூழல். பெரிய மகளினால் இந்த நிலமை என்று அவளைக் குற்றவாளியாக கூண்டில் நிற்கவைக்காத குறைதான் - கேதாருக்கு அவள் மீது அவ்வளவு கடுப்பு.

எங்கே போவதென்று தெரியாமல் நிற்கும் நேரத்தில் தந்தை வந்து நின்றார். "கேள்விப்பட்டேன். வீட்டுக்கு வா," என்று வலுகட்டாயமாக அழைத்துச்சென்றார்.

பறிக்கப்பட்டு கசக்கிபோட்ட பூ மறுபடியும் செடியில் ஒட்ட வைக்க முடியுமா?

ஆனால் தனக்காவது தன் ரணத்தை ஆற்ற வளர்த்த மரத்தின் நிழல் கிடைத்தது. தன் இரு மலர்களுக்கும் சாய்ந்து கொள்ள ஒரு மரம் கூட இல்லாமல் வேரோடு அறுக்கப்பட்டு அவதிப்படுவதை பார்க்க இயலாமல் தவித்தாள்.

அவர்கலையாவது   தன்னம்பிக்கையுடன் தன் காலிலேயே நிற்க கற்றுக்கொடுக்க முற்பட்டாள்.

பாகம் 2
பாகம் 3

No comments:

Post a Comment